Friday, December 4, 2020

மட்டக்களப்பு புல்லுமலைக் காட்டில் பண்டைய வைரவர் கோயிலின் சுவடுகள்

 

மட்டக்களப்பு புல்லுமலைக் காட்டில்
பண்டைய வைரவர் கோயிலின்
சுவடுகள்

 

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                                  NKS/202      04   டிசம்பர்   2020

 குறிப்பு: 

(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

 புல்லுமலைக் காட்டின் எல்லைப் பகுதியில் மிகத்தொன்மை வாய்ந்த ஆலயமொன்றின் சிதைவுகளைக் கண்டேன். இக்காட்டுக் கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வைரவர் கோயிலாக இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

 இப்பகுதியில் இருந்த ஓர் முக்கிய இடத்திற்கு காவலாக இக்கோயில் கட்டப் பட்டிருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது. இங்கு பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட குளம், கால்வாய் அல்லது மாளிகை ஆகியவற்றிற்கு காவலாக இக்கோயில் அமைக்கப் பட்டிருக்கலாம்.

புதையல் பிரியர்கள் இங்கு தமது கைவரிசையை காட்டி உள்ளமை தெரிகிறது. வாயில் தூண்கள் உட்பட 9 பாரிய கற்தூண்கள் இங்கு சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. சில தூண்கள் நிறுத்தி வைக்கப்பட்டும், சில தூண்கள் பாதி அளவு மண்ணுள் புதையுண்டும் காணப்பட்டன.

 கருவறை இருந்த இடத்தில் பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. அதிலும் சில தூண்கள் இடிந்து விழுந்து கிடக்கின்றன.

இங்கு செல்வதற்கு என்னுடன் வந்த நண்பர் நிஷாந்தன், நண்பர் சச்சிதானந்தன், சோமன் ஐயா ஆகியோருக்கு எனது நன்றிகள்.

 என்.கே.எஸ்.திருச்செல்வம்                                              வரலாற்று ஆய்வாளர்                                           இலங்கை.


Wednesday, December 2, 2020

பிதுர்மலைக் காட்டில் சிவன் பற்றிய கல்வெட்டும், கற்குகையும்

 

பிதுர்மலைக் காட்டில் சிவன் பற்றிய கல்வெட்டும், கற்குகையும்



என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/201 02 டிசம்பர் 2020


குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

சிவ பூமியின் சுவடுகளைத் தேடி நான் சென்ற இடங்களில் மிக முக்கியமானவை சிகிரியா மற்றும் பிதுர்மலை ஆகிய பகுதிகளாகும். சிகிரியா பண்டைய காலத்தில் சிவகிரி, சிம்மகிரி எனும் பெயர்களில் வழங்கப்பட்டது.

சிம்மகிரியைப் போலவே சிம்மகிரி மலைக்குன்றின் வடக்குப் பக்கத்தில் சில மைல் தூரத்தில் அமைந்திருக்கும் பிதுரங்கல எனும் மலையும், அம்மலையடிவாரத்தில் உள்ள காடும் பண்டைய காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்கின. இம்மலைப் பகுதிக்குச் சென்றபோது அங்கு எமது பாரம்பரியத்தின் சுவடுகள் பலவற்றைக் காணக் கிடைத்தது.

பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டில் சிம்மகிரி மலைக் கோட்டையில் இருந்து ஆட்சி செய்த காசியப்பனுக்கும், அவனது தந்தையான தாது சேனனுக்கும் நெருங்கிய தொடர்புடைய இடமாக பிதுரங்கல மலை  விளங்கியுள்ளது.

காசியப்பன் தனது தந்தையான தாதுசேனனுக்கு ஒரு சமாதியை இம்மலையில் அமைத்தான் எனக் கூறப்படுகிறது. இதன்படி காசியப்பன் இங்கு தனது தந்தையின் பிதுர்க்கடன்களை நிறைவு செய்து, அதன்பின் மலை உச்சியில் சமாதியை அமைத்திருப்பான் என ஊகிக்கக் கூடியதாக உள்ளது. இதனால் இம்மலை பிதுர்மலை என அழைக்கப்பட்டுள்ளது. அதுவே சிங்கள மொழியில் பிதுர்கல எனவும் பின்பு பிதுரங்கல எனவும் மருவியுள்ளது.

காசியப்பன் காலத்திற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு பிதுர்மலைப் பகுதி சிவவழிபாடு மற்றும் நாக வழிபாடு நிலவிய, அல்லது சிவனையும், நாகத்தையும் வழிபட்டவர்கள் இருந்த இடமாக இருந்திருக்க வேண்டும். மேலும் முனிவர் ஒருவர் இங்குள்ள ஒரு குகையைப் பயன்படுத்தியுள்ளமையும், கண்ணன் வழிபாடு செய்தமை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இக்கூற்றுக்களை உறுதிப்படுத்தும் வகையில் சில ஆதாரங்களை இம்மலை அடிவாரத்தில் உள்ள கற்குகைகளில் கண்டேன். மிக முக்கியமாக இங்கு பொறிக்கப்பட்டிருந்த மூன்று பிராமிக் கல்வெட்டுக்கள் இதனை உறுதிப்படுத்தின.

பிதுர்மலையின் வடக்குப் பக்க அடிவாரத்தில் இயற்கையான சில கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றில் மொத்தமாக நான்கு பிராமிக் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவதாகக் காணப்படும் கல்வெட்டு மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டின் முதல் வரியில் கொலகாமம் என்னுமிடத்தை சேர்ந்த சிவனின் மகனான இளவரசன் மஜ்ஜிமன் என்பவனின் மகள் தீசா தேவியின் குகை சங்கத்தார்க்கு வழங்கப்பட்டது எனக் கூறப் பட்டுள்ளது.

இரண்டாவது, மூன்றாவது வரிகளில் கரடிகாமத்தை சேர்ந்த வீம நாகனின் மனைவியான மண்டநாழி மற்றும் தீசாதேவி எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ள சில சொற்களின் மூலம் சில முக்கிய விடயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. அதன்படி சிவவழிபாடு செய்த சிவன் என்பவன் இப்பகுதியில் ஓர் சிற்றரசனாக இருந்துள்ளான். இவன் ஓர் அரசன் என்பதால் இவனின் மகன் இளவரசன் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளான். சிவனின் மகனின் பெயர் மஜ்ஜிமன் என கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் பாண்டியருடன் தொடர்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மஜ்ஜி எனும் சொல் மீன், மீனவன் ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாகும் எனவும், எனவே இப்பதம் பாண்டிய வம்சத்தவர் அல்லது பாண்டியரின் கீழுள்ள குறுநில மன்னர்களைக் குறிப்பதாகும் எனவும் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வெட்டு பற்றிக் குறிப்பிடுகையில் தெரிவித்துள்ளார். எனவே இக்கூற்று பிதுர்மலைக் கல்வெட்டிற்கும் பொருந்துவதாக உள்ளது.

அடுத்ததாக கல்வெட்டில் உள்ள வீமநாகன் என்பவன் இங்கு நாக வழிபாடு செய்த ஒருவன் எனவும் கூறக் கூடியதாக உள்ளது. மேலும் இக்கல்வெட்டின் இரண்டாவது வரியில் காணப்படும் மண்டநாழி எனும் பெயரின் இறுதியில் உள்ள ழி எனும் எழுத்து தமிழ் பிராமிக்குரிய சிறப்பான எழுத்துக்களில் ஒன்றாகும்.

(தொடரும்..) 

என்.கே.எஸ்.திருச்செல்வம் வரலாற்று ஆய்வாளர் இலங்கை. 


Sunday, November 29, 2020

அனுராதபுரத்தின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட பண்டைய சிவன் கோயில்

 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/200 29 நவம்பர் 2020

குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

சிவபூமியின் சுவடுகளைத் தேடி ஒரு தடவை அனுராதபுரத்திற்கு சென்றபோது அனுராதபுரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள காட்டில் உள்ள விஜேராம விகாரைப் பகுதியில் புதிதாக ஒரு இடத்தில் சில
இடிபாடுகள் அகழ்வாராய்ச்சி செய்யப்படுவதாக அறிந்தேன்.
அநுராதபுரத்தில் வடபகுதியில் தான் சோழர் காலத்தில் பல இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன. எனவே புதிதாக அகழ்வுகள் செய்யப்படும் இந்த இடத்திற்குச் சென்று பார்க்க வேண்டும் எனும் ஆவல் ஏற்பட்டது. அவ்விடத்திற்குச் சென்று பார்த்தபோது அதுவரை பார்க்காத சில அரிய விடயங்களைக் காணக் கிடைத்தது.
அனுராதபுரம் புராதன நகரின் வடக்கில் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள பலுகஸ்வெவ குளத்தின் வட கரையில் விஜேராம விஹாரையின் கட்டிட இடிபாடுகள் காணப்படுகின்றன. இங்கு ஓர் சிவன் கோயிலின் எச்சங்களையும் காணக்கூடியதாக இருந்தது.
இங்கு மேற்கொண்ட அகழ்வுகளின் போது கருங்கல் நந்தி சிலைகளும், இந்து தெய்வச்சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. இதே போன்ற வடிவத்தையுடைய நந்தி சிலைகள் மாத்தளை மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள மெனிக்தென என்னுமிடத்திலும் கண்டெடுக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு கிடைக்கப்பெற்ற நந்தி போன்று இன்னுமோர் நந்தி அபயகிரி விஹாரைப் பகுதியிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இவை இங்கிருந்த சிவாலயத்தின் எச்சங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இத்தெய்வ உருவங்களைக் கொண்டிருந்த சிவாலயம் பொ.ஆ. 7 முதல் 10 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக இருக்கவேண்டும் எனக் கூறப்படுகிறது.
இங்கிருந்த சிவாலயம் பல பரிவார மூர்த்திகளைக் கொண்டிருந்தது எனக்கூறும் வகையில் சிவாலயத்தின் அதிஷ்டானத்தில் 6 சிம்மக் கோமுகிகள் காணப்படுகின்றன.


மேலும் சிவாலய கட்டிடத்தின் சுவர்களில் நின்ற நிலையில் சிவன்-பார்வதியின் 6 புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிவன்-பார்வதி சிற்பங்களின் இரண்டு பக்கங்களிலும் துவார பாலகர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன.
இவற்றைத் தவிர இங்கு வெண்கலத்தினால் செய்யப்பட்ட சிறிய நந்தியின் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. இது 12 செ.மீற்றர் உயரமுடைய சிறிய நந்தியாகும்.


பொ.ஆ. 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்சிலையின் முதுகுப் பகுதி உடைந்துள்ளது. திமிலின் பின்பகுதி காணப்படவில்லை. இச்சிலை தற்போது கொழும்பு தேசிய நூதன சாலையில் உள்ளது.
இப்படியான சுமார் 20க்கும் மேற்பட்ட இந்துக்கோயில்கள் அனுராதபுரத்தில் காணப்படுவதாக H.C.P. பெல் அவர்களின் ஆய்வுக் குறிப்புகள் மூலம் தெரிய வருகிறது.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்.
இலங்கை.

உகந்தை மலையில் காணப்படும் அபூர்வமான கல் குடை

 
உகந்தை மலையில் காணப்படும்
அபூர்வமான கல் குடை



என்.கே.எஸ்.திருச்செல்வம்.
NKS/199 29 நவம்பர் 2020

குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

அம்பாறை மாவட்டத்தின் தெற்கில் குமண பறவைகள் சரணாலய நுழைவாயிலின் அருகில் உகந்தை மலை அமைந்துள்ளது.
இங்கு மலையடிவாரத்தில் பிரதான முருகன் கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் வலது பக்கத்தில் பிள்ளையார் மலையும், அதன் வலது பக்கத்தில் வள்ளி மலையும் காணப்படுகின்றன.
வள்ளி மலையின் பின் பக்கம் அபூர்வமான அமைப்புடன் ஒரு தனிக்கல் காணப்படுகிறது. இதுவே கல்குடையாகும்.
இது சுமார் 10 அடி விட்டமும், 8 அடி உயரமும் கொண்டதாகும்.


பிரதான பாறையில் தூக்கி வைத்தாற்போல் காணப்படும் இப்பெரிய கல்லை அதன் அடிப்பகுதியில் சுமார் ஒரு அடி விட்டமுள்ள பகுதியே தாங்கி நிற்கிறது.
தமிழ்நாட்டில் மாமல்லபுத்தில் உள்ள "கிருஸ்ணனின் வெண்ணெய் உருண்டை" என்றழைக்கப்படும் கல்லை ஒத்ததாக இக்கல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கதிர்காமத்தின் கிழக்குப் பக்கம் அமைந்துள்ள சித்தர் மலையிலும் ஓர் கல்குடை காணப்படுகிறது. அது அளவில் பெரியதாகும்.
உகந்தைமலை முருகனைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் இக் கல்குடையும் ஒன்றாகும்.
என்.கே.எஸ்.திருச்செல்வம்.
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

கோயில் கிணற்றடியில் 600 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டு.

 

கோயில் கிணற்றடியில் 600 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டு.


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/198 29 நவம்பர் 2020

குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)


சிவ பூமியின் சுவடுகளைத் தேடி எமது தொன்மையான வரலாற்றைக் கூறும் கோயில்களும், பாரம்பரிய தொல்பொருள் சின்னங்களும் காணப்படும் இடங்களுக்கு சென்ற போது பல முக்கிய சின்னங்களை காணக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட ஓர் இடத்திற்குச் சென்றேன்.
அது வவுனியா மாவட்டத்தில் உள்ள ஆறுமுகத்தான் புதுக்குளம் எனும் ஊரில் உள்ள கந்தசுவாமி கோயில்.
இவ்விடம் வவுனியா நகரின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இங்குள்ள கந்தசுவாமி கோயில் சுமார் 600 வருடங்கள் பழமை வாய்ந்த கோயில் என்பதற்கான பல சான்றுகள் இங்கு காணப்பட்டன.

இங்கு 3 புராதன கற்தூண்களின் உடைந்த துண்டுகள் உட்பட பல தொல்பொருள் சின்னங்களைக் காண முடிந்தது. இவற்றில் புராதன கோமுகி கருவறையுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது. மற்றும் பலிபீடம் ஆகியவற்றோடு புராதன மயில் ஒன்றின் கற்சிலையும், சில கற் தூண்களின் பாகங்களும் காணப்பட்டன. இவை யாவும் தேடுவாரற்று ஆங்காங்கே கிடந்தன.

எல்லாவற்றையும் பார்த்து விட்டு கிணற்றடிக்குச் சென்றேன். அங்கு தான் நான் எதிர்பார்க்காத ஓர் முக்கிய சின்னத்தைக் காணக் கிடைத்தது.
அது ஓர் தமிழ்க் கல்வெட்டு. அதில் 15 வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. ஒரு நீளமான கற்தூணில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. கிணற்றின் அருகில் கால் கழுவப் பயன்படுத்தப்படும் சீமெந்து கட்டுக்கு செல்ல ஒரு படியாக இக்கல் வைக்கப்பட்டுள்ளது. இதில் பல எழுத்துக்கள் சிதைந்து காணப்பட்டன.


இது ஒரு கல்வெட்டு என அறிந்ததும் அங்கு வந்த ஆலய நிர்வாகிகளிடம் விபரத்தை கூறி அதைப் பாதுகாக்கும்படி கூறினேன். அங்கு வெளியே கண்டபடி கிடந்த தொல்பொருள் சின்னங்களையும் கோயிலின் உள்ளே பாதுகாப்பாக வைக்கும் படி கூறினேன்.
இது போன்ற நூற்றுக்கணக்கான அரிய, சின்னங்கள் எமது ஆலயங்களுக்கு வெளியே குப்பைகளில் தேடுவாரற்று கிடப்பதை பல இடங்களில் கண்டுள்ளேன்.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அழகிய அம்மன் சிலையும்.

 



என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/197 29 நவம்பர் 2020


குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)
ஒரு தடவை அனுராதபும் புனித நகரத்திற்குச் சென்றபோது மிகவும் மோசமான, அவல நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த பண்டைய காளி கோயிலின் இடிபாடுகளைக் கண்டேன். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
அனுராதபுரம் புராதன நகரின் மத்தியில், தூபராம தாதுகோபத்திலிருந்து அபயகிரி தாதுகோபத்திற்கு செல்லும் வழியில் பாதையின் இடது பக்கத்தில் இக்காளி அம்மன் கோயில் அமைந்திருந்தது. தூபராம தாதுகோபத்தின் வடக்குத் திசையில் 500 மீ தொலைவில் வீதியின் இடது புறத்தில் இக்கோயிலின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இவ்வீதி முன்பு வை வீதி என அழைக்கப்பட்டது. புராதன அனுராதபுரக் கோட்டையின் மேற்கு வாசலுக்கு நேராக இவ்வாலயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அகழியாலும், அரணாலும் சூழப்பட்ட இக்கோட்டைப் பகுதியில் முதலாம் விஜயபாகுவின் அரண்மனையின் இடிபாடுகளும் கெடிகே, தலதாமாளிகை போன்றவற்றின் எச்சங்களும் காணப்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அனுராதபுரக் கோட்டையின் மேற்கு வாசற் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது ஆய்வாளர் H.C.B. பெல் அவர்களால் இங்கிருந்த இந்துக் கோயிலின் இடிபாடுகளும், சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விடிபாடுகளுக்கு மத்தியில் அழகிய அம்மன் விக்கிரகம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலை மகிஷமர்த்தினியின் தோற்றத்தை உடையதாகும்.
அனுராதபுரம் காளி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட இந்த மகிஷமர்த்தினி அம்மன் சிலை இலங்கையில் கிடைக்கப்பெற்ற தெய்வச் சிலைகளிலேயே மிகவும் உன்னதமானதும், அழகிய வடிவமைப்பையும் கொண்டதாகும். எட்டு கைகளையுடைய இந்த அம்மன் சிலை ஓர் செங்குத்தான நீள் வட்டக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
அம்மனின் முகத்தில் மூக்குப்பகுதி சற்று சிதலமடைந்து காணப்படுகின்றது. மேலும் சிலையின் அடியில் கணுக்கால் பகுதி முற்றாக வெடித்து சிலை இரண்டு துண்டுகளாகக் காணப்படுகிறது. வெடித்த இந்தப்பகுதி சிலையுடன் சேர்த்து ஒட்டவைத்து முழுமையாக்கப்பட்டுள்ளது.


அம்மனின் எட்டுக் கைகளிலே மேற்பகுதியிலுள்ள கைகளில் சங்கும், கதாயுதமும் ஏந்திய வண்ணம் உள்ளன. அடுத்த இரண்டு கைகளில் வாளும், வில்லும் காணப்படுகின்றன. அடுத்த இரண்டு கைகளில் உள்ள ஆயுதங்கள் உடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இக்கைகளில் திரிசூலமும், ஈட்டியும் இருந்திருக்க வேண்டும். கீழே உள்ள கைகளில் இடது கையில் பெரிய கத்தியை நிலத்தில் ஊன்றிய வண்ணமும், வலது கையை இடுப்பில் வைத்தவாறும் செதுக்கப் பட்டுள்ளது.
தலையிலே கிரீடமும், காதுகளில் வளையமும், தோள்களிலே அம்புக் கூடையும், கழுத்திலே மணிமாலைகளும், மார்பிலே ஆடை அணிகளும், கைகளிலே வளையல்களும், இடையிலே ஒட்டியாணமும், இடுப்பிலே கச்சையும், கால்களிலே சிலம்பும் அணிந்த வண்ணம் வடிவமைக்கப்பட்ட இத்தனை நேர்த்தியான புராதன சிலையை இலங்கையில் வேறு எங்கும் காண முடியாது.
இப்படிப்பட்ட அழகிய, நேர்த்தியான மகிஷமர்த்தினியின் சிலை கொழும்பு தேசிய நூதனசாலையை அலங்கரிக்கும் அதேவேளை, இச்சிலையைப் பாதுகாத்த கோயில் கவனிப்பாரின்றி பற்றைகள் வளர்ந்து கற்தூண்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக வீசப்பட்டு அவல நிலையில் காணப்படுகின்றது.
இந்த மகிஷமர்த்தினியின் உருவம் நானாதேசிக வணிகர்களின் வணிக முத்திரையிலும் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நானாதேசிக வணிகர்கள் அனுராதபுரத்தில் அரச செல்வாக்குப் பெற்று விளங்கியிருந்தபடியால், இவர்களின் வர்த்தக நகரங்கள் அனுராதபுரத்தின் பிரதான பெளத்த விகாரைகளுக்கு சமீபத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. இவர்களின் குலதெய்வமான பரமேஸ்வரியின் வடிவமே மகிஷமர்த்தினி என்பதால் இவ்வம்மனை மூலமூர்த்தியாகக் கொண்ட ஆலயத்தை இவ்விடத்தில் அமைத்திருந்தனர். இவ்வாலயம் பொலநறுவைக் காலத்தில் அமைக்கப் பட்டிருந்தது.
தூபராம தாதுகோபத்திற்கு செல்லும் வழியில் இவ்வாலயம் அமைந்திருந்ததால், தாதுகோபத்தைத் தரிசிக்க வரும் மக்கள் அதிகமாகக் கூடும் இடமான இப்பகுதியில் வணிகர்களின் விற்பனை நிலையங்கள் இருந்த இடத்திற்கு அருகிலேயே அவர்களால் அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது என்று ஊகிக்கக் கூடியதாக உள்ளது.
இவ்வம்மன் ஆலயம் கர்ப்பக்கிருகம், அந்தராளம், மண்டபம் போன்ற பகுதிகளைக் கொண்டிருந்தது. 20 தூண்கள் கூரையைத் தாங்கியிருந்தன. கோயில் பிரகாரத்தின் மதில்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன.
பராக்கிரமபாகு மன்னனின் மனைவியான லீலாவதி தனது ஆட்சியின் போது அனுராதபுரத்திலுள்ள தூபிகளைத் தரிசிக்க வரும் மக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக ஓர் தானசாலையை அமைத்தாள். இதற்கு வேண்டிய அரிசி முதல் சரக்குகள் போன்ற பொருட்களை பெறுவதற்காக “பலவலவி மேதாவி” என்னும் மடிகையினை தானசாலைக்கு அருகில் நானாதேசிக வணிகரைக் கொண்டு அமைப்பித்தாள். இத்தானம் பற்றிய லீலாவதியின் கல்வெட்டு ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன் மூலம் அனுராதபுரத்தில் தமிழ் நானாதேசிக வணிகர்கள் அரச ஆதரவுடன் விற்பனை மையங்களை அமைத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது நிரூபனமாகிறது.
இவ்வணிகர்களால் தமது விற்பனை நிலையங்களுக்கருகில் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வம்மன் ஆலயத்தைத் தவிர வேறுபல ஆலயங்களும் இவர்களால் அனுராதபுரத்தில் அமைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன.
அநுராதபுரத்தில் உள்ள பண்டைய பெளத்த வழிபாட்டிடங்கள் எல்லாம் புனரமைக்கப்பட்டு மக்களால் வழிபடப்படுகின்றன. ஆனால் இக்காளி கோயில் புனரமைக்கப்படவில்லை. கண்கொண்டு பார்க்க முடியாத அவல நிலையில் இக்கோயில் காணப்படுவது மனதுக்கு வேதனையை அளிக்கிறது.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

சிம்மகிரி, சிகிரியா எனும் சிவகிரியில் காளி வழிபாடு

 

சிம்மகிரி, சிகிரியா எனும்
சிவகிரியில் காளி வழிபாடு


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/196 29 நவம்பர் 2020

குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)
பண்டைய காலத்தில் சிவகிரி என்றும் காசியப்பன் காலத்தில் சிம்மகிரி என்றும் அழைக்கப்பட்டு தற்போது சிகிரியா என்றழைக்கப்படும் மலைக்கோட்டையில் காளி வழிபாடு நிலவிய கற்குகையைத் தேடிச் சென்றேன்.
இக்கற்குகை சிம்மகிரி மலைக் கோட்டையின் அடிவாரத்தில் உள்ளது. இக்கற்குகையில் 2000 வருடங்களுக்கு முன்பு காளி வழிபாடு நிலவியுள்ளது.
சிம்மகிரி மலை அடிவாரத்தில் உள்ள கற்குகைகளில் பொறிக்கப் பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுகளில் காளி பற்றிய கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இக்கற்குகை பிரதான மேற்குப்பக்க பாதையில் உள்ள பாறைத் தோட்டத்தில், இரு கற்பாறைகளுக்கு இடையில் அமைந்துள்ள நுழைவாயிலில், இடது பக்கத்தில் உள்ள பறையின் மேற்பகுதியில் வெட்டப்பட்டுள்ள கற்புருவத்தின் கீழே பொறிக்கப்பட்டுள்ளது.

இப்பாறையின் கீழ் காணப்படும் குகையில் காளி கோயில் இருந்திருக்கலாம் என எண்ணக் கூடியதாக உள்ளது. ஏனெனில் இவ்விடத்தில் தெய்வச் சிலை வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் நீள்சதுர வடிவமுள்ள பீடக்கல் ஒன்று காணப்படுகிறது. கற்பீடத்தின் பின்பக்கம் பாறையுடன் இணைக்கப்பட்டு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுப்பகுதியில் இருந்த கற்பலகை காணப்படவில்லை. கற்பீடத்தின் மூன்று பக்க விளிம்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன. புதையல் திருடர்கள் பீடக்கல்லைத் தோண்டி எடுத்து அதன் அடியில் இருந்த திரவியங்களை எடுத்திருப்பார் எனத் தோன்றுகிறது.
இக்குகையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு பேராசிரியர் பரணவிதானவால் வாசிக்கப் பட்டுள்ளது. இக்கல்வெட்டின் விபரம் பின்வருமாறு.
“பரும(க) கடிய புத்த”
இதன் பொருள், “பெருமகன் கடியின் புத்திரன்” என்பதாகும். கடி என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது காளியைக் குறிக்கும் பதமாகும் என பேராசிரியர் பரணவிதான கருதுகிறார்.

எனவே கல்வெட்டின் பொருள் பின்வருமாறு அமைகிறது.
“பருமகனான காளியின் பெயரைத் தாங்கியோனின் புத்திரன்”
இதன்படி சிகிரியா பகுதியில் காளி வழிபாடு நிலவியுள்ளது எனக் கூறக் கூடியதாக உள்ளது.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.