Sunday, October 4, 2020

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்-பகுதி 6

 

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும்   வரின் இன்னிசை சாம்ராஜ்யமும்

பகுதி 6

என்.கே.எஸ்.திருச்செல்வம்

 

எஸ். பி. பி. அவர்கள் பாடிய 16 ஆவது பாடல்

1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த திரைப்படம் ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், சரோஜாதேவி ஆகியோர் நடிப்பில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய மாலதி.  

இப்படத்தில் மொத்தமாக மூன்று பாடல்கள் இடம் பெற்றிருந்தன. மூன்றும் ஜோடிப் பாடல்கள். இவற்றில் ஒரு பாடலை டி.எம்.எஸ், எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடினர். ஏனைய இரண்டு பாடல்களையும் பி.சுசிலாவுடன் இணைந்து எஸ்.பி.பி பாடினார். கண்ணதாசன் அவர்களின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி. அவர்கள்  இசையமைத்திருந்தார்.

கற்பனையோ கை வந்ததோ-சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.

என ஒரு பாடல் தொடங்குகிறது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த இந்தப் பாடலை அந்தக் காலத்தில் முணுமுணுக்காத இளைஞர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு சூப்பர் ஹிட் பாடலாக இது விளங்கியது. இப்பாடலின் சரணத்தின் இறுதிப்பகுதியில் வரும் சுகமோ சுகம்-சுகமோ சுகம்-சுகமோ சுகம் எனும் வரிகள்   இருவரின் குரல்களில் மனதை மயக்கின.

17 ஆவது பாடல்

மாலதி படத்தில் இடம்பெற்ற அடுத்த பாடல்

சிடுசிடு சிடுசிடு சிடுசிடு சிடுசிடு எங்கே போவோம்          

எனத் தொடங்கும் பாடல். இப்பாடலிலும் பல்லவியின் இறுதிப் பகுதியில் வரும்

பச்சைக் கிளிபோல ஊரெங்கும் பறந்து-                          இச்சை மொழிபேசி எங்கெங்கும் திரிந்து-                          பார்த்தும் பாராமல் மகிழந்தாலென்ன-                            பாடித் திரிந்தாலென்ன  

எனும் வரிகள் இருவரின் குரல்களில் சிறப்பாக அமைந்தன.

மாலதி திரைப்படத்தை அந்தக்காலத்தில் நான் பார்க்கவில்லை. பாட்டுப் புத்தகம் மட்டுமே என்னிடம் இருந்தது. எஸ்.பி.பி. அவர்கள் பாடிய இந்த இரண்டு பாடல்களையும் ரவிச்சந்திரனுக்காக பாடியிருந்தார் என நினைத்திருந்தேன். காரணம் பாட்டுப் புத்தகத்தின் முகப்பில் ரவிச்சந்திரன், சரோஜாதேவி ஆகிய இருவரின் படங்களே காணப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் இத்திரைப்படத்தை வீடியோவில் பார்த்தபின் தான் தெரிந்தது எஸ்.பி.பி. அவர்கள் குரல் கொடுத்தது ரவிச்சந்திரனுக்கு அல்ல, ஜெமினி கணேசனுக்கு என்பது.    

18 ஆவது பாடல்

1970 ஆம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் எஸ்.பி.பி. அவர்களுக்கு இரண்டு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் நிலவே நீ சாட்சி.

உயிருக்குயிராக காதலித்த இருவரில் காதலி சந்தர்ப்ப வசத்தால் மனோதத்துவ டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. இதை அறிந்த காதலன் சுய நினைவை இழக்கிறான். இந்நிலையில் தன் நண்பனின் தம்பியான காதலனை குணப்படுத்த மனோதத்துவ டாக்டர் கடும் முயற்சியை மேற்கொள்கிறார். அப்போது தன் மனைவிதான் நண்பனின் தம்பியின் காதலி என்பதை அறிந்து, தன்  மனைவியால் மட்டுமே அவளின் பழைய காதலனுக்கு மீண்டும் சுயநினைவைக் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்து கணவன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக கதை அமைந்துள்ளது. 

 

பி. மாதவன் இயக்கத்தில் ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, முத்துராமன் நடித்த இப்படத்தில் கண்ணதாசனின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி. இசையமைத்துள்ளார். படத்தில் உள்ள 5 பாடல்களும் பிரபல்யமானவை. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்கள். இவற்றில் இரண்டு பாடல்களை எஸ்.பி.பி.பாடியுள்ளார். ஒரு பாடலை தனியாகவும், அடுத்த பாடலை பாடகி ராதாவுடன் இணைந்தும் பாடியுள்ளார்.

அந்தக் காலத்து இளைஞர்கள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக  இப்பாடல் அமைந்திருந்தது. தான் காதலியை வர்ணித்துப் பாடும் அந்தப் பாடல்.

 பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ

பாடலின் ஆரம்பத்தில் எஸ்.பி.பி. அவர்கள் பாடும் ஹம்மிங் வழமை போல மிகவும் இனிமையாக இருந்தது.  

மூன்று கனிச்சாறு ஒன்றாகப் பிழிந்து-

மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து-

போதை மதுவாகப் போனமேனி மலர்ந்து-                    

பூவை வந்தால் பெண்ணாகப் பிறந்து

என தன் காதலியை வர்ணிக்கும் இந்த வரிகளை எஸ்.பி.பி.யின் குரலில் மூன்று கனிச்சாற்றையும் பாடலைக் கேட்கும் நாம் ஒன்றாகப் பருகியது போல இனிக்கும். அதிலும் மூன்று சரணங்களிலும் வரும் கடைசி வரிகளான,

பூவை வந்தால் பெண்ணாகப் பிறந்து

காணக் காணவேண்டும் ஒரு கோடி இன்று

இன்பம் அவளின்னும் அறியாத கல்வி                              

ஆகிய மூன்று வரிகளும் உண்மையில் எத்தனை தடவைகள் கேட்டாலும் அலுக்காதவை..   

 

19 ஆவது பாடல்

அடுத்த பாடலை எஸ்.பி.பி. அவர்கள் பாடகி ராதாவுடன் இணைந்து பாடியிருந்தார். அரிதான சில பாடல்களை மட்டும் பாடிய பாடகி ராதா. படத்தில் மனதை உருக்கும் அந்த உச்சக்கட்டப் பாடல்,

நிலவே நீ சாட்சி-மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்-

நிலவே நீ சாட்சி

காதலர்கள் காதலிக்கும் சமயம் நிலவை சாட்சியாக வைத்து காதலி பாடும் பாடல் இது. படத்தின் உச்சக் கட்டத்தில் காதலனுக்கு பழைய நினைவுகள் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்பதற்காக இன்னொருவனின் மனைவியான காதலி அந்தப் பாடலை மீண்டும் பாடும் போது, காதலன் நினைவு திரும்பி, தான் பழைய காதலியைப் பார்த்த மகிழ்ச்சியில் தானும் தொடர்ந்து அப்பாடலைப் பாடுவதாக அந்தக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பாடல்களையும் ஜெய்சங்கருக்காக எஸ்.பி.பி. பாடியுள்ளார்.

(தொடரும்..)

என்.கே.எஸ்.திருச்செல்வம்

இலங்கை


Friday, October 2, 2020

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்-பகுதி 5

 

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும்   அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்

பகுதி 5

 என்.கே.எஸ்.திருச்செல்வம்


1970 ஆம் ஆண்டு மீண்டும் இன்னுமோர் திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக எஸ்.பி.பி அவர்கள் பாடும் வாய்ப்பு கிட்டியது. பழம் பெரும் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர், கலைச்செல்வி ஜெயலலிதா நடித்து வெளிவந்த தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் எம்.எஸ்.வி அவர்களின் இசையில் ஒரு பாடலைப் பாடினார் எஸ்.பி.பி.  

திரைப்படத்தில் மொத்தமாக 7 பாடல்கள். இவற்றில் டூயட் பாடல்கள் மூன்று. இந்த மூன்று பாடல்களையும் டி.எம்.எஸ், பி.சுசீலா ஆகியோர் பாடினர். தொடர்ந்து ஜோடிப் பாடல்களைப் பாடி வந்த எஸ்.பி.பி அவர்களுக்கு வழமைக்கு மாறாக இப்படத்தில் தனிப்பாடல் ஒன்றை மட்டுமே பாடும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் தனிப் பாடல்கள் 4. இவற்றில் இரண்டு பாடல்களை டி.எம். எஸ். அவர்களும், ஒரு பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியும் பாட, அடுத்த பாடலை எஸ்.பி.பி. பாடினார்.

13 ஆவது பாடல்

 வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்-

அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும் 

எனும் இப்பாடல் வாலி அவர்களின் வரிகளில் தாயைப் போற்றிப் பாடும் பாடலாக எஸ்.பி.பி. அவர்களின் குரலில் ஒலித்தது.               


தாய்ப்பாலில் வீரம் கண்டேன்-

தாலாட்டில் தமிழைக் கண்டேன்

உண்ணாமல் இருக்கக் கண்டேன்-

உறங்காமல் விழிக்கக் கண்டேன்

மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ

அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ

எனும் வரிகள் மூலம் எஸ்.பி.பி. அவர்கள் தாயைப் போற்றிப் பாடிய முதலாவது பாடலாக இது அமைந்தது.

1970 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியான நவக்கிரகம் திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான பாடலைப் பாடும் வாய்ப்பு எஸ்.பி.பி. அவர்களுக்குக் கிடைத்தது. கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் முத்துராமன், சிவகுமார், லக்ஷ்மி, நாகேஷ் ஆகியோர் நடித்த இப்படத்தில் வாலியின் பாடல்களுக்கு வி.குமார் இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தம் 5 பாடல்கள். நடிகர்களே வசனம் போல பேசும் பாடல்கள் மூன்று. இசையோடு பாடும் பாடல்கள் இரண்டு. அவற்றில் ஒன்றை ஏ.எல்.ராகவன் பாடினார். அடுத்த பாடல் ஒரு காதல் டூயட் பாடல். இப்பாடலை பி.சுசிலாவுடன் இணைந்து சிவகுமாருக்காக எஸ்.பி.பி. பாடினார். பாடினார் என்பதை விட ஹம் செய்தார் என்பதே சரி.

அன்றைய கால கட்டத்தில் பாடல்களின் ஆரம்பத்திலும், இடையிலும் பாடகர்கள் ஹம்மிங் இசைப்பது பாடல்களின் இனிமையைக் கூட்டும் ஒரு விடயமாகக் கருதப்பட்டது. அந்த வகையில் எஸ்.பி.பி அவர்களின் குரல் ஹம்மிங் இசைப்பதற்கு பொருத்தமானதாகவும் இருந்தது. இதை இனம் கண்டு கொண்ட இசையமைப்பாளர் எம்.எஸ்.வி அவர்கள் எஸ்.பி.பிக்குக் வாய்ப்புக் கொடுத்த தனது முதல் பாடலிலேயே அவரை ஹம்மிங் இசைக்க வைத்தார். அந்தப்பாடல் இயற்கையென்னும் இளையக்கன்னி.

அதன் பின்பு இசையமைப்பாளர்கள் எஸ்.பி.பி பாடிய பல பாடல்களை ஹம்மிங் இசையோடு பாட வைத்தனர். இவர்களை விட ஒரு படி மேலே சென்று ஒரு வித்தியாசமான கோணத்தில் எஸ்.பி.பி. அவர்களைப் பாட வைத்தார் இசையமைப்பாளர் வி.குமார்.

14 ஆவது பாடல்

 உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது

எனும் அந்தப்பாடல், ஆரம்பத்தில் எஸ்.பி.பி அவர்களின் ஹம்மிங் இசையோடு தொடங்கும். பி.சுசீலா அவர்கள் பாடலைப் பாடுவார். எஸ்.பி.பி பாடலின் இடையிலும், முடிவிலும் ஹம்மிங் மட்டும் இசைத்துக் கொண்டிருப்பார். இப்படி பாடல் வரிகள் எதையும் பாடாமல்

ஆஹாஹா... ஓஹோஹோ... ம்ம்ம்... லல்லல்லா..

என எஸ்.பி.பி அவர்களை ஹம்மிங் மட்டும் பாடவைத்து அந்தப் பாடலை முடித்து புதுமை செய்தார் வி.குமார். எஸ்.பி.பி அவர்களின் ஹம்மிங் இசைக்காக மட்டுமே இந்தப் பாடலை எத்தனை தடவையும் வேண்டுமானாலும் கேட்டகலாம்.

1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த இரண்டு திரைப்படங்களில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய மூன்று பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் ஒன்று காவியத் தலைவி எனும் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், செளகார் ஜானகி ஆகியாரை வைத்து கே.பாலச்சந்தர் இயக்கிய படம். கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தம் 7 பாடல்கள். ஒரு பாடலைத் தவிர ஏனைய பாடல்கள் எல்லாம் இலங்கை வானொலி மூலம் பிரபல்யம் ஆயின. நான்கு தனிப் பாடல்களை பி.சுசீலா பாடினார். பழம்பெரும் நடிகையும், பாடகியுமான எஸ்.வரலக்ஷ்மியுடன் சேர்ந்து சுசீலா மேலும் ஒரு பாடலைப் பாடி இருந்தார். நேரான நெடுஞ்சாலை எனும் ஒரு காவியப் பாடலை எம்.எஸ்.வி. பாடினார். படத்தில் இடம் பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ரவிச்சந்திரனுக்காகப் பாடியிருந்தார் எஸ்.பி.பி அவர்கள்.

15 ஆவது பாடல்

 ஆரம்பம் இன்றே ஆகட்டும்-ஆறேழு நாட்கள் போகட்டும்

எனும் அப்பாடல் இலங்கை வானொலியில் பல தடவைகள் இனிமையாக ஒலித்ததைக்  கேட்டேன். ஆனால் பிற்காலத்தில் இப்பாடலை வீடியோவில் பார்த்தபோது, நான் வானொலியில் கேட்ட பாடலை விட சற்று வித்தியாசமாக இருந்தது. வானொலியில் கேட்ட பாடலில் இடையிசை அதிகமாக இருந்தது. அத்துடன் சரணத்தின் சில வரிகள் இரண்டு தடவைகள் ஒலித்தன. அதனால் பாடல்  ஒலிக்கும் நேரம் சற்று அதிகமாக இருந்தது. இப்படி பல பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டுள்ளேன்.

(தொடரும்... )

என்.கே.எஸ்.திருச்செல்வம்



Thursday, October 1, 2020

 

“வீட்டுக்கு வீடு” எனும் திரைப்படம் வெளியானது. ஜெய்சங்கர், லக்ஷ்மி, முத்துராமன் நடிப்பில் சி.வி.ராஜேந்திரன் இயக்கிய இப்படத்தில் 5 பாடல்கள். கண்ணதாசனின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி. இசையமைத்திருந்தார். பி.சுசீலா, சாயிபாபா ஆகியோர் ஒவ்வொரு தனிப்பாடல்களையும், எல். ஆர்.ஈஸ்வரி இரண்டு தனிப் பாடல்களையும் பாடியிருந்தனர்.
படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை எல்.ஆர். ஈஸ்வரியுடன் இணைந்து ஜெய்சங்கருக்காக எஸ்.பி.பி பாடினார்.

பத்தாவது பாடல்
“அங்கம் புதுவிதம்-அழகினில் ஒரு விதம்-நங்கை முகம் நவரச நிலவு” எனும் இப்பாடல் ஆரம்பத்தில் ஹம்மிங் இசையுடன் தேனாக ஒலித்தது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகி ஹிட் ஆனது.

"கற்பனை அற்புதம்-காதலே ஓவியம்-
தொட்டதும் பட்டதும் தோன்றுமே காவியம்"
எனும் முதலாவது சரணத்தின் இறுதியில் வரும் வரிகள், இருவரின் குரலிலும் தேனைக் கலந்து ஊட்டியது. பாடலும் வெற்றி பெற்றது.
#1970_ஆம்_ஆண்டு_ஜூலை_மாதம் எஸ்.பி.பி அவர்கள் பாடிய பாடல்களுடன் இரண்டு திரைப் படங்கள் வெளிவந்தன. ஒன்று ஜெய்சங்கர், லக்ஷ்மி நடித்து, சின்னப்பா தேவர் தயாரித்த “மாணவன்”. சங்கர்-கணேஷ் இரட்டையர்களின் இசையில் படத்தில் 4 பாடல்கள். இரண்டு தனிப் பாடல்கள், இரண்டு ஜோடிப் பாடல்கள்.
ஜோடிப் பாடல்களில் ஒன்றை டி.எம்.எஸ். உடன் பி.சுசிலா பாடினார். “வீசிலடிச்சான் குஞ்சுகளா” எனும் இப்பாடலுக்கு மட்டும் உலக நாயகன் கமல் இளைஞனாக முதன் முதல் தோன்றி ஆடிப் பாடினார்.
அடுத்த காதல் ஜோடிப் பாடலை ஜெய்சங்கருக்காக பி.சுசிலாவுடன் இணைந்து எஸ்.பி.பி. பாடினார்.

11 ஆவது பாடல்
“கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ” எனும் வாலியின் இப்பாடல் சங்கர்-கணேஷ் இசையில் எஸ்.பி.பி பாடிய முதலாவது பாடலாகும்.
"ஆஹா.. ஹா.. ஆஹா.. ஆஹா..
லல்ல லல்ல லா...லல்ல லல்ல லா '
என பாடலின் ஆரம்பத்தில் தொடங்கும் ஹம்மிங் இசை இருவரின் குரலிலும் தித்திப்பாக ஒலித்தது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த இப்பாடல் எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்த பாடல் போலவே இருந்தது. சங்கர்-கணேஷ் இசையமைத்த பாடல் என்பதை நம்ப முடியவில்லை. அத்தனை சிறப்பாக மெட்டமைத்திருந்தனர் சங்கர்-கணேஷ் இரட்டையர்கள்.
பாடலின் இரண்டு சரணங்கள் மட்டுமே வானொலியில் ஒலித்தன. வீடியோவிலும் அப்படியே. இந்த இரண்டு சரணங்களுக்கும் இடையில் இன்னுமொர் சரணம் இருந்ததை பாட்டுப் புத்தகத்தின் மூலமே அறிந்து கொண்டேன்.
"வானவில்லின் ஏழு வண்ணம் கண்ணோடுதான்-
வாங்கி வந்த பாவை இனி உன்னோடுதான்-
நான் தொடத்தான்... நாணமோ
தேன் சுவைத்தேன்... தீருமோ"

என வாலி அவர்கள் எழுதிய அழகிய வரிகளை எஸ்.பி.பி-பி.சுசீலா அவர்களின் குரல்களில் கேட்க முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது.
சாண்டோ சின்னப்பா தேவர் ஒரு தீவிர முருக பக்தர். இதனால் அவரது படங்களுக்கு பாட்டெழுதும் போது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் முருகன் பற்றிய சொற்களை சேர்த்து எழுதுவது வழக்கம். இதே யுக்தியை வாலி அவர்களும் இந்தப்பாடலில் கையாண்டிருந்தார். பாடலின் மூன்றாவது சரணம் அவ்வாறு எழுதப்பட்டது.
"மின்னுகின்ற கன்னிரண்டும் வேலாயுதம்-
மங்கை மனம் மன்னனுக்கு மயில் வாகனம்-
வா பக்கம் வா... நெருங்கி வா-
தா தொட்டுத் தா... தொடர்ந்து தா"
எனும் அந்த வரிகள் எஸ்.பி.பி-சுசீலா ஆகியோரின் குரலில் தேன் சுவையை ஊட்டியது.
#1970_ஆம்_ஆண்டு_ஜூலை_மாதம் வெளிவந்த அடுத்த திரைப்படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ நடித்த “தலைவன்”. பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையானாயுடுவின் இசையில்
4 பாடல்கள் படத்தில் இடம்பெற்றன. மூன்று ஜோடிப் பாடல்கள். ஒரு தனிப்பாடல். தனிப்பாடல் ஒன்றையும், ஜோடிப்பாடல்கள் இரண்டையும் டி.எம்.எஸ்.அவர்கள் பாடினார்.
படத்தில் ஒரு காதல் டூயட் கனவுப் பாடல். இப்பாடலைப் பாடும் வாய்ப்பு எஸ்.பி.பி. அவர்களுக்குக் கிடைத்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்காக இரண்டாவது பாடலை பி.சுசிலாவுடன் இணைந்து எஸ்.பி.பி பாடினார்.

12 ஆவது பாடல்
“நீராளி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில்”
எனும் அப்பாடலை வாலி அவர்கள் எழுதியிருந்தார். இலங்கை வானொலியில் கேட்ட இப்பாடலை அப்போதே திரையிலும் பார்த்தேன்.
திரைப்படம் கருப்பு-வெள்ளையாக இருந்தபடியால்





கனவுப் பாடலை நன்றாக ரசிக்க முடியவில்லை. எம். ஜி. ஆர். அவர்கள் எழுபதுகளில் நடித்து வெளிவந்த திரைப்படங்களில் மூன்று படங்கள் மட்டுமே கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டன. அவற்றில் “தலைவன்” படமும் ஒன்று. பாடலின் சரணத்தின் இடையில் எஸ்.பி.பி. அவர்கள் இசைக்கும் ஹம்மிங் இசை இதயத்தை வருடிச் சென்றது.
( தொடரும்..)
என்.கே.எஸ்.திருச்செல்வம்
இலங்கை

நான்_அறிந்த_இசை_அரசன் எஸ்_பி_பியும் அவரின்_இன்னிசை_சாம்ராஜ்யமும் - பகுதி_3

 

இசை அரசன் எஸ்.பி.பி அவர்கள் அறிமுகமான முதல் ஆண்டிலே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் 3 பாடல்களும், கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் ஒரு பாடலும், தெலுங்கு திரைப்பட இசை அமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி அவர்களின் இசையில் ஒரு பாடலும் பாடினார்.
5 பாடல்கள் மட்டுமே பாடியிருந்தாலும் எஸ்.பி.பி அவர்கள் பட்டி தொட்டி எல்லாம் புகழ் பெற்றிருந்தார். அதற்குக் காரணம் “ஆயிரம் நிலவே வா” பாடல்.

ஐந்தாவது பாடல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் “அடிமைப்பெண்” திரைப்படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடியது. படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பி அவர்கள் பாடிய “ஆயிரம் நிலவே வா” பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.
அறிமுக ஆண்டான 1969 ல் 5 பாடல்கள் பாடிய எஸ்.பி.பி அவர்களுக்கு அடுத்த ஆண்டான 1970 ல் 14 பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் என்று கூட சொல்லலாம். 14 பாடல்களில் 7 பாடல்கள் அவரின் இசையில் பாடினார்.
இந்த 14 பாடல்களில் ஒன்றைத் தவிர ஏனைய 13 பாடல்களும் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்து அன்றைய இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.
1970 ல் பொங்கல் அன்று “ஏன்” என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. ரவிச்சந்திரன், லஷ்மி, ஏ.வி.எம்.ராஜன் ஆகியோரின் நடிப்பில் டி.ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பாவின் இசையில் 7 பாடல்கள் இடம்பெற்றன. இவற்றில் எஸ்.பி.பி. அவர்களுக்கு இரண்டு பாடல்கள் பாடும் வாய்ப்பை கிடைத்தது. இதிலே ஒரு சிறப்பான பாடல்.
அண்ணன், தங்கை ஆகியோர் பாடும் டூயட் பாடல்கள் தமிழில் மிக மிகக் குறைவு என்றே கூறலாம். பாசமலர் பாடலுக்குப் பின் அப்படியான பாடல்கள் வந்ததாக ஞாபகம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு பாடலை ஹம்மிங் பாடகி சரளாவுடன் இணைந்து பாடினார் எஸ்.பி.பி.

ஆறாவது பாடல்
எனும் பாடல் அது. அந்த அண்ணன், தங்கை பாடலை அண்ணன் ஏ.வி.எம். ராஜனுக்காக அனாயாசமாகப் பாடியிருந்தார் எஸ்.பி.பி.
அண்ணனும் தங்கையும் மகிழ்ச்சியோடு முருகனை வீட்டுக்கு அழைப்பது போன்ற வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
அண்ணனுக்கு பெண் பார்க்க-
வரும் அண்ணியை என் கண் பார்க்க
என் தங்கையின் துணையை நான் பார்க்க-
அந்த இன்பத்தை நீ பார்க்க-
நீ வருவாயா வேல்முருகா...
எனும் வரிகள் அண்ணன் தங்கை பாசத்தை படம் பிடித்துக் காட்டின.
இரண்டாவது பாடலை படத்தின் நாயகனான ரவிச்சந்திரனுக்காகப் பாடினார் எஸ்.பி.பி.

ஏழாவது பாடல்
என்ற இந்தப் பாடல் ஒரு தத்துவப் பாடலாக அமைந்தது.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 7 பாடல்களில் டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, சரளா ஆகியோர் 5 பாடல்கள் பாடியிருந்தனர். இருப்பினும் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய பாடல்கள் இரண்டும் பிரபல்யம் அடைந்தன.
அந்த ஆண்டு சித்திரை புதுவருடப்பிறப்பு அன்று வெளியான இரண்டு படங்களில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய இரண்டு பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
அவற்றில் ஒன்று அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் வசனம் எழுதி, திருமலை மகாலிங்கம் இயக்கிய “காதல் ஜோதி” எனும் திரைப்படம். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், காஞ்சனா ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்தில் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் இசையில் 4 பாடல்கள் இடம்பெற்றன.

ரவிச்சந்திரனுக்காக சீர்காழி கோவிந்தராஜன் இரண்டு பாடல்களைப் பாடினார். எல் ஆர்.ஈஸ்வரி ஒரு பாடல். படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து எஸ்.பி.பி. பாடினார். மென்மையான இதய ராகமாக அந்தப் பாடல் ஒலித்தது.

எட்டாவது பாடல்
#கண்கண்ட_கனவெல்லாம்_கலையாதது எனும் இப்பாடலின் ஆரம்பத்திலும், இடையிலும் மனதை வருடும் ஹம்மிங் இசையை எஸ்.பி.பி, சுசீலா ஆகிய இருவரும் வழங்கி இருந்தமை பாடலைக் கேட்கும் எம்மை எங்கோ கொண்டு சென்றது. அத்தனை இனிமையான ஹம்மிங்.
இலங்கை வானொலியில் அடிக்கடி இப்பாடல் ஒலித்து சூப்பர் ஹிட் பாடலானது.

எஸ்.பி.பி. அவர்கள் பாடிய அடுத்த பாடல் இடம்பெற்ற படம் “பத்தாம் பசலி”. ஜெமினி கணேசன். நாகேஷ், ராஜஸ்ரீ ஆகியோரை வைத்து கே.பாலசந்தர் இயக்கிய படம். ஜெமினி கணேசன் நாயகனாக நடித்தாலும் நாகேஷ் அவர்களுக்கே படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
படத்தில் மொத்தமாக 6 பாடல்கள். எல்லாப் படல்களையும் ஆலங்குடி சோமு எழுத, வி.குமார் இசையமைத்திருந்தார்.
நாகேஷ் அவர்களுக்காக டி.எம்.எஸ். குரலில் 3 பாடல்கள். எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா ஆகியோர் தனியாக ஒவ்வொரு பாடலைப் பாடினார். படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை பி.சுஷீலாவுடன் இணைந்து எஸ்.பி.பி. பாடியிருந்தார்.








ஒன்பதாவது பாடல்
எனும் இப்பாடலை இலங்கை வானொலியில் கேட்க முடியவில்லை. படத்திலும் பாடல் இடம் பெறவில்லையாம். இன்று வரை இந்தப் பாடலை நான் கேட்டதில்லை. இப்படி ஒரு பாடல் உள்ளதென்பதை பாட்டுப் புத்தகத்தின் மூலமே நான் தெரிந்து கொண்டேன்.
(மிகுதி தொடரும்..)
என்.கே.எஸ்.திருச்செல்வம்
இலங்கை.