Monday, June 22, 2020

தென்னிலங்கையில் கசாகல என்னுமிடத்தில் காணப்பட்ட சிவபூமியின் சுவடு


தென்னிலங்கையில் கசாகல என்னுமிடத்தில் காணப்பட்ட    சிவபூமியின் சுவடு


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/179     23 ஜூன் 2020

 
குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

சிவபூமியின் சுவடுகளைத் தேடி தென்னிலங்கைக்கு சென்றேன்.  அங்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பண்டைய காலத்தில் சிவவழிபாடு நிலவிய சில  இடங்களில் உள்ள அதன் சுவடுகளைக் கண்டறிய வேண்டும் என்பதே அந்தப் பயணத்தின் நோக்கமாக இருந்தது. அவ்விடங்களில் ஒன்று தான் கசாகல. இங்கு ஆறு பிற்கால பிராமிக் கல்வெட்டுக்கள் இருப்பதாக சிங்கள பத்திரிக்கை ஒன்றில் படித்தேன். அன்றில் இருந்து கசாகலவுக்கு போய் அந்தக் கல்வெட்டுக்களைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் உண்டானது.

மாத்தறை நகரிலிருந்து அம்பாந்தோட்டைக்கு செல்லும் பேரூந்தில் ஏறி அவ்வீதியில் உள்ள ரன்ன சந்தியில் இறங்கினேன். அங்கிருந்து வடக்கு நோக்கி வீரகேட்டியவுக்கு போகும் பேரூந்தில் ஏறி 9 கி.மீ தூரத்தில் இருந்த கசாகல ரஜமகா விகாரை சந்தியில் இறங்கினேன். அங்கிருந்து இடது பக்கமாகச் செல்லும் வீதியில் 300 மீற்றர் தூரத்தில் விகாரை வளாகம் அமைந்திருந்தது. அது சுமார் 250 மீற்றர் அகலமும், 300 மீற்றர் நீளமும் கொண்ட ஓர் கற்பாறைகள் நிறைந்த பிரதேசத்தில் அமைந்திருந்தது.
இவ்விகாரை பொ.ஆ.மு.2ஆம் நூற்றாண்டில் மாகம இராச்சியத்தை ஆட்சி செய்த காவந்தீசன் எனும் மன்னனால் கட்டப்பட்டதாக ஆலய வரலாறு கூறுகிறது.

விகாரை வளாகத்தின் முன்பக்கம் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் இடது பக்கம் சுமார் 100 மீற்றர் தூரத்தில் பழமை வாய்ந்த கல் மதிற்சுவர் காணப்பட்டது. அதன் உள்ளே சிவபூமியின் சுவடுகள் உள்ளனவா எனத் தேடிப் பார்க்க வேண்டும். கல் மதிற் சுவரினால் சூழப்பட்ட அந்த விகாரை வளாகத்தினுள் சென்று பார்த்தேன்.

அங்கு மத்தியில் பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்றும், அதன்  பின் பக்கம் மூன்று பழமை வாய்ந்த கட்டிடங்களின் இடிபாடுகளும், முன் பக்கம் உள்ள பாறையின் மேல் தூபியும், அதன் அருகில் ஓர் கட்டிடத்தின் இடிபாடும் காணப்பட்டன. இவை 150 மீற்றர் நீளமும், 115 மீற்றர் அகலமும் கொண்ட கற்சுவரினால் மதில் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள கட்டிடத்தின் அதிஷ்டானம் முழுவதும் கருங்கலினால் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு நோக்கிய வாசலைக் கொண்ட இக்கட்டிடம் பழைய சிலைமனை எனக் கூறப்படுகிறது. உள்ளே புத்த பகவான், விஷ்ணு பகவான் ஆகியோரின் பழமை வாய்ந்த சுதைச் சிலைகள் காணப்படுகின்றன. 


இக்கட்டிடத்தின் பின்பக்கம் உள்ள மூன்று பழமை வாய்ந்த கட்டிட இடிபாடுகளில் 50 க்கும் மேற்பட்ட கருங்கல் தூண்கள் காணப்பட்டன. இப்பகுதியில் சிவபூமியின் சுவடுகள் நிச்சயம் இருக்க வேண்டும் எனும் ஆவலுடன் தேடித் பார்த்தேன். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

அடுத்ததாக மலைப்பறை உள்ள பகுதிக்குச் சென்றேன். மலைப் பறையின் உயர்ந்த பகுதியில் தூபி அமைக்கப்பட்டுள்ளது.  இம் மலைப் பாறையின் மேற்பரப்பில் மொத்தமாக 6 கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை பொ.ஆ. 5 ஆம், 7 ஆம் நூற்றா ண்டில் பொறிக்கப்பட்ட பிற்கால பிராமிக் கல்வெட்டுகளாகும். இக்கல் வெட்டுக்கள் அனைத்தும் தற்போது கம்பிவேலியால் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக்களை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். எல்லாம் சிதைந்து காணப்பட்டன. சில எழுத்துக்கள் மட்டுமே தெரிந்தன. அவற்றை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.



இக்கல்வெட்டுக்கள் உள்ள பகுதியில் கல்வெட்டு பற்றிய ஓர் பெயர்ப்பலகை பொருத்தப்பட்டிருந்தது. அதில் ஏதாவது எனக்குத் தேவையான விபரங்கள் இருக்கும் என ஆவலுடன் அங்கு சென்று பார்த்தேன். அதில் இங்கு 6 பாறைக் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் உள்ள எழுத்துக்கள் பெரும்பாலும் சிதைந்து காணப் படுவதால் அவற்றின் பொருளை வாசித்து அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது என எழுதப்பட்டுள்ளது. அங்கும் ஏமாற்றமே.

பின்பு இங்குள்ள புதிய விகாரையில் இங்குள்ள பண்டைய சிதைவுகள் பற்றிய விபரங்கள் கிடைக்கலாம் என நினைத்து அங்கு சென்று, அவ்வழிபாட்டுத்தலம் பற்றிய வரலாறு நூல் உள்ளதா என விசாரித்தேன். அப்பொழுது அங்கிருந்தவர்கள் இவ்விகாரை பற்றிய ஓர் சிறிய நூலைத் தந்தனர்.

அதை ஆவலுடன் வாசித்துப் பார்த்தேன். அதில் இங்குள்ள பாறையில்  பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் பற்றிய விபரங்கள் காணப்பட்டன. அவற்றை ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டு வந்தபோது, நான் தேடிவந்த சிவபூமியின் சுவடுகள் பற்றிய ஓர் முக்கிய விடயம் அதில் காணப்பட்டது.

அது இங்கு இருக்கும் ஆறு கல்வெட்டுகளில் ஒன்றில் சிவன் எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ள விடயமாகும். குறிப்பிட்ட இக் கல்வெட்டில் மொத்தமாக 5 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. இதன்படி ம.. எனும் கிராமத்தைச் சேர்ந்த சிவன் என்பவனுக்கு சொந்தமான.... எனக் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் விபரம் பின்வருமாறு:

..... ம ஹி சிவஹ ....
பொருள்- ம.. எனும் கிராமத்தைச் சேர்ந்த சிவனுக்கு சொந்தமான...

இக்கல்வெட்டு கூறும் செய்தியின் மூலம் கசாகல பகுதியில் பண்டைய காலத்தில் சிவ வழிபாடு செய்த சிவன் என்பவன் வாழ்ந்துள்ளான் என்பது உறுதியாகத் தெரிகிறது. இவன் எனும் கிராமத்தை சேர்ந்தவன் என்பதும், இவனுக்கு சொந்தமான ஏதோ ஒன்றை தானமாக இங்கிருந்த ஆலயத்திற்கு வழங்கியுள்ளான் என்பதுமே கல்வெட்டு கூறும் செய்தியாகும்.


 அந்த ஆலயம் எது? அவன் தானம் செய்தது எதை? என்ற விபரங்கள் உள்ள எழுத்துக்கள் எல்லாம் சிதைந்துள்ளன. எனவே சிவன் என்பவன் இங்கிருந்த சிவன் கோயிலுக்கு தானங்கள் வழங்கியிருப்பான் என எண்ணக் கூடியதாக உள்ளது.
நான் தேடிச்சென்ற சுவடுகளின் முக்கிய விடயமொன்றைக் கண்ட  மகிழ்ச்சியில் அங்கிருந்து எனது அடுத்த இலக்கை நோக்கிப் பயணமானேன்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment