Sunday, April 26, 2020

இலங்கையை சுற்றிவந்து இறுதியில் பெளத்த விகாரைக்குள் சங்கமமாகிய சிவபக்தன் இராவணனின் சிலை



இலங்கையை சுற்றிவந்து இறுதியில் பெளத்த விகாரைக்குள் சங்கமமாகிய  சிவபக்தன் இராவணனின் சிலை


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                           NKS/153      27 April 2020
































தென்னிலங்கையில் சிவபூமியின் சுவடுகளைத் தேடி கதிர் காமத்துக்கு சென்றபோது சற்றும் எதிர்பாராத வகையில் இராவணன் பற்றிய ஓர் தொல்பொருள் விடயம் கிடைத்தது. அது இராவணனின் பழமை வாய்ந்த சிலை. அங்கு அதன் விபரங்களைப் பெற்ற பின் அது தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்களைத் திரட்டுவதற்காக கொழும்புக்கு அருகில் உள்ள பன்னிபிட்டிய என்னுமிடத் துக்குச் சென்றேன். அது ஒரு பெளத்த விகாரை. அங்கு நான் இதுவரை எங்கும் கண்டிராத இராவணனின் பழமை வாய்ந்த மரச்சிலையைக் கண்டேன்.


இப்படி ஓர் அபூர்வமான சிலை எப்படி, எங்கு கிடைத்தது என அங்குள்ள முக்கியஸ்தர்களிடம் கேட்டபோது மிகவும் சுவாரஷ் யமான தகவல்கள் கிடைத்தன.

சில வருடங்களுக்கு முன்பு மன்னார் மாவட்டத்தின் தெற்கில் உள்ள காட்டில்  இந்த சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை கண்டெடுத்தவர்கள் சிங்கள மக்கள். பத்து தலைகளும், பல கைகளையும் உடைய இச்சிலையை முருகனின் சிலை என நினைத்து கதிர்காமத்திற்குக் கொண்டு சென்று அங்குள்ள கோயிலில் ஒப்படைத்துள்ளார்கள். கதிர்காமத்தில் உள்ளவர்கள் அது முருகன் சிலை அல்ல என்பதைக் கண்டு கொண்டார்கள். ஆனால் யாரின் சிலை என்பதை சரியாக அடையாளம் காண வில்லை. பின்பு அச்சிலை ஓர் மூலையிலே சில காலம் கிடந்துள்ளது.

இந்தக் கால கட்டத்தில் திருகோணமலை உல்லாச விடுதி ஒன்றின் சிங்கள உரிமையாளர் ஒருவர் கதிர்காமத்திற்கு சென்றுள்ளார். அவர் கதிர்காம கோயில் முக்கியஸ்தர் ஒருவரின் நண்பர். அவர்  மூலையில் கிடந்த  இந்தச் சிலையைக் கண்டு, தனது விடுதியில் காட்சிக்கு வைக்க உகந்தது என எண்ணி, சிலையை தனக்கு தரும்படி கேட்க, அவரும் சிலையை நண்பருக்குக் கொடுத்து விட்டார்.
 

பல காலமாக மன்னார் காட்டில் மறைந்து கிடந்து, பின்பு மன்னாரில் இருந்து, கதிர்காமத்திற்கும் சென்று, பின்பு அங்கிருந்து திருகோண மலைக்கு, அதாவது தான் ஆட்சிசெய்த திரிகூடகிரிக்கே சென்றார் சிலை வடிவில் இருந்த இராவணன்.

இந்த கால கட்டத்தில் கொழும்புக்கு அருகில் உள்ள பன்னிபிட்டிய என்னுமிடத்தில் உள்ள ஓர் பெளத்த விகாரையின் பிரதம பிக்கு இராவணன் மீது மிகுந்த பற்று கொண்டவராகவும், இராவணன் பற்றிய விடயங்களில் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார். பிக்குவின் நண்பர் ஒருவர் மூலமாக மன்னார் காட்டுப்பகுதியில் பல தலைகளும், பல கைகளும் கொண்ட ஓர் சிலை இருப்பதாக அவர் அறிந்தார். பன்னிபிட்டிய விகாரை பிக்குவிற்கு  இராவணன் பற்றி நன்கு தெரிந்திருந்தபடியால்,  அச்சிலை தன் மனம் கவர்ந்த நாயகன் இராவணனுடையது தான் என்பதை சட்டென்று புரிந்து கொண்டார்.

உடனே மன்னாரில் குறிப்பிட்ட இடத்துக்கு தன் நண்பருடன் சென்று பார்த்த போது, அச்சிலை முருகனின் சிலை  என  நினைத்து கதிர் காமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என அறிந்தார். உடனே கதிர்காமத்துக்கு விரைந்த பிக்கு அங்கு இச்சிலையைப் பற்றிக் கேட்டபோதுதான் தனது யூகம் சரியானது என உறுதி செய்து கொண்டார். அங்கு இருந்தவர்கள் அச்சிலையில் பத்து தலைகளும், இருபது கைகளும் இருந்ததாகக் கூறினர். ஆனால் அது முருகன் சிலை இல்லை எனவும், யாருடைய சிலை என்பது தெரியவில்லை  என்பதால் ஓர் மூலையில் கிடந்ததாகவும், பின்பு ஓர் விடுதி உரிமை யாளர் திருகோணமலைக்கு  கொண்டு சென்று விட்டார்  எனவும்  பிக்குவிடம் கூறினர். 


உடனே அந்த சிலையை எப்படியாவது தனது இடத்துக்கு கொண்டு வரவேண்டும் என முடிவெடுத்து  சிலையை தேடி  திருகோணமலை க்குச் சென்ற பிக்குவுக்கு அங்கும் ஏமாற்றமே காத்திருந்தது.
திருகோணமலையில் குறிப்பிட்ட விடுதியில் அந்த சிலை காணப் படவில்லை. சிலையை விடுதியில் வைக்கக் கூடாது என நண்பர்கள் கூறியதால் சிலையை தன் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு கொடுத்து விட்டதாக விடுதி உரிமையாளர் பிக்குவிடம் கூறினார். 


இருப்பினும் பிக்கு தனது முயற்சியைக் கைவிடவில்லை. விடுதியின் பக்கத்து ஊரில் உள்ள நண்பரின் வீட்டுக்குச் சென்றார். அங்கும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிலை வீட்டில் இல்லை. 

வீட்டில் இருந்தவர்களிடம் சிலை பற்றி விசாரித்தபோது, அந்தச் சிலையை வீட்டில் வைத்திருக்கக் கூடாதாம், வைத்திருந்தால் வீட்டில் பிரச்சினைகள் ஏற்படுமாம் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியதால் அருகில் உள்ள காட்டுப் பற்றைக்குள் மறைத்து வைத்து விட்டோம் எனக் கூறியுள்ளனர்.


அப்போதும் மனம் தளராத பிக்கு எப்படியாவது சிலையை எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு சிலையைத் தேடி அருகில் இருந்த ஓர் மைதானத்துக்கு அப்பால் உள்ள பற்றைக் காட்டுக்குச் சென்று பார்த்தார். தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஆறு அடி உயரமான இராவணனின் சிலையை கண்டார்.

பல நாட்களின் பின் தேடி அலைந்து இறுதியில் சிலை கைக்குக் கிடைத்த ஆனந்தத்தில் பூரித்துப்போன பிக்கு சிலையை கொழும்பு க்குக் கொண்டு வந்தார். கொழும்பிலே, பன்னிபிட்டியிலே தனது விகாரை வளாகத்திலேயே இராவணனுக்கு ஓர் கோயில் கட்டி அங்கே தனக்குக் கிடைத்த பொக்கிஷமான இராவணனின் சிலையை பாதுகாப்பாக வைத்துள்ளார். 


இந்த சம்பவத்தைக் கேட்டவுடன், ஆச்சரியமாக இருந்தது. ஓர் பெளத்த பிக்கு மிகவும் சிரமப்பட்டு, மனம் தளராமல் பல நாட்கள் இலங்கை முழுவதும் தேடி அலைந்து மாபெரும் சிவபக்தன்  இராவணனின் சிலையை பெற்றுள்ளார் என்பது வியப்பாக இருந்தது.



பன்னிபிட்டிய பிக்குவின் விகாரை வளாகத்தில் நான் கண்ட இராவணனின் இம்மரச்சிலை சுமார் 6 அடி உயரமானது. அந்த சிலை  9 தலைகள், 19 கைகளைக் கொண்டிருந்தது. மிகுதி ஒரு தலையும், ஒரு கையும் வீணையாக இராவணின் கைகளில் காணப் பட்டது. பத்து தலைகளின் நெற்றியில் முப்பட்டையாக விபூதி, பொட்டு மற்றும் முறுக்கிய மீசை, தலைகளில் கிரீடங்கள், மார்பிலும், தோள்களிலும் கவசங்கள், கைகளில் வளையங்கள், கைகள், மார்பு, வயிறு ஆகியவற்றில் முப்பட்டை விபூதி, இடுப்பிலே கச்சை என சிவபக்தன் இராவணனின் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இச்சிலை காணப்பட்டது.

இச்சிலை  சுமார் 500 வருடங்கள் பழமையானது எனவும், வேப்ப மரத்தினால் வார்க்கப்பட்டது எனவும் அறிந்தேன். சிலை இலங்கையில் செய்யப்பட்டதா அல்லது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதா என்பது தெரியவில்லை. 


இச்சிலை மன்னாரின் தென்பகுதியில் உள்ள காட்டில் வாழ்ந்த ஓர் சந்நியாசியால் வணங்கப்பட்ட சிலையாக இருக்க வேண்டும். யுத்த காலத்தின் போது சந்நியாசி இவ்விடத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்றிருப்பார். யுத்தம் முடிந்த பின்பு இப்பகுதிக்குச் சென்ற சிங்களவர்கள் சிலர் இச்சிலையைக் கண்டிருப்பார்கள். அவர்கள் மூலமாக இச்சிலை கதிர்காமத்திற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது.

நமக்கு சொந்தமானதை, நாம் கணக்கெடுக்காமல் விட்டு விட்டதால் அவர்கள் கையிலெடுத்து விட்டார்கள். கோயிலும் கட்டி விட்டார்கள்.

வடக்கில் இருந்து தெற்குக்கு வந்து, அங்கிருந்து கிழக்குக்குச் சென்று, கிழக்கில் இருந்து மேற்கு வந்து, மொத்தத்தில் இலங்கைத் தீவையே சுற்றி வந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார் இராவணன். 

என்.கே.எஸ்.திருச்செல்வம்

வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 

No comments:

Post a Comment